அமெரிக்க நாடாளுமன்ற கட்டத்துக்குள் புகுந்து ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை அடுத்து ட்ரம்ப்பின் பேஸ்புக் மற்றும் ருவிட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.
யூடூப்பும் அவரது வீடியோவை தனது பக்கத்தில் இருந்து நீக்கியது.
நாடாளுமன்றக் கட்டத் தொகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய தனது ஆதரவாளர்களை கலைந்து செல்லுமாறு கோரி ட்ரம்ப் தனது பேஸ்புக், ருவிட்டர் மற்றும் யூடூப்பில் வீடியோக்களை வெளியிட்டார்.
எனினும் தோ்தலில் மோசடிகள் இடம்பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.
அத்துடன், கலவரத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களுக்கு தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் "ஐ லவ் யூ" என்று ட்ரம்ப் அந்த வீடியோ பதிவில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்தப் பதிவுகள் வன்முறையாளர்களை மேலும் உற்சாகமாக்கும் எனக் கூறி பேஸ்புக், ருவிட்டர் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் அவரது அந்தப் பதிவை நீக்கின. அத்துடன், ட்ரம்ப் தொடர்ந்து பதிவிட முடியாத வகையில் அவரது கணக்குகளையும் பேஸ்புக், ருவிட்டர் நிறுவனங்கள் தற்காலிகமாக முடக்கின.
எங்கள் கொள்கைகளை மீறியதாலேயே ட்ரம்பின் ருவிட்கள் அகற்றப்பட்டன. அத்துடன் அவரது கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. ஆனால் அவரது கணக்கு பாதுகாப்பாக தொடர்ந்து பேணப்பட்டு மீண்டும் கையளிக்கப்படும் எனவும் ருவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொள்கை விதிகளை தொடர்ந்து மீறினால் @realDonaldTrump என்ற ஜனாதிபதி ட்ரம்பின் உத்தியோகபூா்வ கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் ருவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ட்ரம்பின் கணக்கை 24 மணி நேரங்களுக்கு பேஸ்புக் தடை செய்துள்ளது.
வன்முறைகள் தொடர்ந்து அதிகரிக்காமல் தடுக்கும் நோக்குடனேயே ட்ரம்பின் கணக்குகளை தற்காலிகமாக முடக்கியதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.